/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார் கரூரில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
கரூரில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
கரூரில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
கரூரில் பிரபல ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
ADDED : ஜூன் 20, 2025 01:44 AM

கரூர்:கரூரில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கரூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபல ரவுடி, 'பென்சில்' தமிழழகன், 31. இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உட்பட, 14 வழக்குகள் உள்ளன.
ஜூன், 17 இரவு, கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்பில், சுக்காலியூரை சேர்ந்த மலையாளம், 51, என்பவர் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அவரிடம், போதையில் இருந்த தமிழழகன், அவரது கூட்டாளிகளான, பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
பின், மலையாளத்தை கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழழகன் தலைமறைவானார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு போலீசாருக்கு, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரம்பாளையம் மேம்பாலம் அருகில், தமிழழகன் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு விரைந்த போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, தமிழழகன் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றார்.
போலீசார், தமிழழகனின் வலது முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த தமிழழகன், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா விசாரிக்கிறார்.


