/உள்ளூர் செய்திகள்/கரூர்/மூடப்பட்ட மாநகராட்சி இறைச்சி கூடம்: ஆடுகளை வெட்ட கட்டணம் வசூல் கனஜோர்மூடப்பட்ட மாநகராட்சி இறைச்சி கூடம்: ஆடுகளை வெட்ட கட்டணம் வசூல் கனஜோர்
மூடப்பட்ட மாநகராட்சி இறைச்சி கூடம்: ஆடுகளை வெட்ட கட்டணம் வசூல் கனஜோர்
மூடப்பட்ட மாநகராட்சி இறைச்சி கூடம்: ஆடுகளை வெட்ட கட்டணம் வசூல் கனஜோர்
மூடப்பட்ட மாநகராட்சி இறைச்சி கூடம்: ஆடுகளை வெட்ட கட்டணம் வசூல் கனஜோர்
ADDED : ஜன 31, 2024 03:35 PM
கரூர் : மூடி கிடக்கும் கரூர் மாநகராட்சி இறைச்சி கூடத்தின் பெயரில், ஆடுகள் வெட்டுவதற்கு கட்டணம் மட்டும் வசூல் செய்யப்பட்டு வருதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த, 2006--11ல், தி.மு.க., ஆட்சியின் போது, வாங்கல் சாலை, பாலம்மாள்புரத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டது. கறிக்கடை வைத்து இருப்பவர்கள், மாநகராட்சி நவீன இறைச்சி கூடத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று அறுத்து சுத்தப்படுத்தி கறியை மட்டும் எடுத்து அவரவர் கடையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன இறைச்சி கூடம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான முறையில் இறைச்சி கிடைக்கும் என கூறப்பட்டது.
ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாக இறைச்சி கூடம் பூட்டி கிடக்கிறது. இந்நிலையில், செயல்படாத இறைச்சி கூடத்திற்கு, மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூல் செய்தாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசின் விதிகள்படி, வெட்டப்படும் ஆடுகளை, முந்தைய நாள் இரவில், ஆட்டிறைச்சி கூடங்களில் விட வேண்டும். மறுநாள், கால்நடை மருத்துவர் அவற்றை பரிசோதிப்பார். பிறகு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியில் மாநகராட்சி சீல் வைக்கப்படும். அந்த ஆட்டிறைச்சியை தான், விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இறைச்சி கூடம் பூட்டி கிடப்பபதால், மாநகராட்சி பகுதியில் அத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. திறந்தவெளியில் ஆடுகளை வெட்டி இறைச்சியாக்கி, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மாநகராட்சி சார்பில் இறைச்சி கடைகளில் மட்டும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, ஒரு ஆடு வெட்ட, 100 ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் ரசீதில், கரூர் மாநகராட்சி, இறைச்சி கடை, குத்தகைதாரர், வசூலிப்பர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி சீல், முத்திரை எதுவும் இல்லை. அதில், வேறு கட்டணம் தொகை மட்டும் குறிப்பிடப்படுகிறது. இதுபோல, கோழி, மீன் கடைகளில் இறைச்சி கழிவுகளில் அப்புறப்படுத்த என்ற பெயரில், 200 முதல், 1,500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி சார்பில் இறைச்சி கழிவுகளை வாங்கி அப்புறப்படுத்துவ கிடையாது. இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. மூடப்பட்டு இருக்கும் இறைச்சி கூட்டத்திற்கு, வதை கட்டணம் எப்படி வசூல் செய்கின்றனர் என்ற தெரியவில்லை. இதற்கு உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில், ''மூடப்பட்ட இறைச்சி கூடம் பெயரில் ஆடுகள் வெட்ட வசூல் செய்யப்படுகிறதா? என விசாரணை செய்கிறேன்,'' என்றார்.