ADDED : ஜூலை 20, 2024 02:27 AM
டி.என்.பாளையம்,;ஈரோடு மாவட்டம், பங்களாப்புதுார் அருகே புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் வீதியில், புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து ஏழு பேர் வசிக்கின்றனர்.இந்த இடத்தை மீட்பது தொடர்பாக, சட்ட நடவடிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்க, கோபி மண்டல துணை தாசில்தார் இலக்கியசெல்வம் தலைமையில், வாணிப்புத்துார் நில வருவாய் ஆய்வாளர் சக்தி வேல், புஞ்சை துறையம்பாளையம் அ கிராம வி.ஏ.ஓ., நடராஜ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்றனர்.
பழனியப்பன் மனைவி சரசாள், நோட்டீசை பெற்றுக்கொள்ள முன் வந்தார். ஆனால், பங்களாப்புதுார், அண்ணா நகரை சேர்ந்த மதன்குமார், ரவி, நாகராஜ், அசோக் உள்ளிட்டோர், அரசு அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தை பேசியுள்ளனர். நோட்டீஸ் வழங்க விடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசில், அரசு அலுவலர்கள் தரப்பில் புகார் தரப்பட்டது.இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பவுனாள் என்பவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.