ADDED : அக் 03, 2025 09:55 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரடகம் அருகே, நடந்து சென்ற வடமாநில வாலிபரிடம் காரில் வந்து மொபைல் போன் பறித்து சென்ற இருவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சன்னி குமார், 28. ஒரகடம் அருகே, மதுரா புதுக்கோட்டை கிராமத்தில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் இருவர், சன்னி குமாரை மடக்கி அவரிடமிருந்து மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.
இது குறித்த புகாரின் படி, காஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜா கோகுல், 26, மற்றும் சண்முகம், 27, ஆகிய இருவரை கைது செய்த ஒரகடம் போலீசார், அவர்களிடமிருந்து கார் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


