ADDED : ஜன 24, 2024 10:03 PM
தாம்பரம்:ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த சூர்யா மகன் ஜெயபால், 14. எட்டாம் வகுப்பு வரை படித்து பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், ஜெயபாலை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமை ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். இரண்டு நாட்கள் அங்கு சுற்றித் திரிந்து, பின் அங்கிருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.
கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனிடம், சேலையூர் போலீசார் விசாரித்தனர். பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வந்தது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, பூந்தமல்லியில் உள்ள உறவினர்களிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர்.