Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் சான்று பெற பயனாளிகள் அலைக்கழிப்பு

வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் சான்று பெற பயனாளிகள் அலைக்கழிப்பு

வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் சான்று பெற பயனாளிகள் அலைக்கழிப்பு

வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் சான்று பெற பயனாளிகள் அலைக்கழிப்பு

ADDED : ஜூன் 05, 2025 09:49 PM


Google News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரத்தில் வாலாஜாபாத், தென்னேரி, மாகரல் ஆகிய மூன்று குறுவட்டங்கள் உள்ளன.

இவற்றில், வாலாஜாபாத் குறுவட்டத்தில் 29 ஊராட்சிகள், தென்னேரியில் 28, மாகரல் 23 என, மொத்தம் 80 ஊராட்சிகள் உள்ளடங்கி உள்ளன.

இந்த ஊராட்சிகளை சேர்ந்தோர், ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று மற்றும் நில உரிமை மாற்றம், நில எடுப்பு பட்டா, பட்டா பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் வந்து விண்ணப்பம் செய்கின்றனர்.

இவ்வாறான கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்தில் முறையாக தீர்வு காணாமல், வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் மக்களை அலைக்கழிக்க செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வாலாஜாபாத் பகுதியினர் கூறியதாவது:

வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில், அலுவலர் பலரும் அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர். இதனால், கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் மீது, தீர்வு காணப்படாத நிலை உள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள் கணினி வாயிலாக மேற்கொள்ளும் பணிகளின் போது, பெயர்களை தவறுதலாக பதிவிடுகின்றனர். அவ்வாறான பெயரை திருத்தம் செய்ய மனு அளித்தால், அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வழங்கினாலும், மாத கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.

எனவே, கோரிக்கை மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து, தேவையான நேரத்தில் சான்றுகள் கிடைக்கும்படி முறையாக பணிகள் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து வாலாஜாபாத் தாசில்தார் மோகனகுமார் கூறுகையில், ''அலுவலகப் பணிகள் தாமதமாவதாக கூறும் மனுதாரர்களின் கோரிக்கை குறித்து விசாரணை செய்து, உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us