ADDED : மார் 17, 2025 11:44 PM

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், சில வாரங்களகாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளியில் நடமாடுவோர், வெயிலை சமாளிக்க இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.
கோடைக்காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் வகையில், தர்பூசணி, கீரைக்காய் உள்ளிட்டவை காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரமாநிலத்தில் இருந்துவரவழைக்கப்பட்ட கிர்ணி பழம், நடமாடும் வாகனங்களில் இரண்டு கிலோ 100 ரூபாய்க்கு என, காஞ்சி புரம் வீதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராணிபேட்டையைச் சேர்ந்த கிர்ணி பழ வியாபாரி எஸ்.பாஷா கூறியதாவது:
ஆந்திரா மாநிலம், கடப்பா, அனந்தபூர் மாவட்டங்களில், கிர்ணி பழம் அதிகளவு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது, கோடை காலத்தையொட்டி தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
தற்போது, இரண்டு கிலோ கிர்ணி பழத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வரத்து அதிகரித்தால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
உடல்வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தருவதோடு பல்வேறு சத்துக்கள் அடங்கிய பழம் என்பதால், பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.