ADDED : மார் 14, 2025 08:59 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. எலக்ட்ரீஷியன்.
இவர், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவரது விவசாய நிலத்தின் பாசன மின் மோட்டாருக்கு மின் சப்ளை வரவில்லை என பணி மேற்கொள்ள சென்றார்.
அப்போது, அங்கிருந்த ஒரு மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துள்ளார். பெரிய காலனி பகுதி மின் வினியோகத்திற்கான மின்மாற்றியில் மின்சாரம் துண்டிப்பதற்கு பதிலாக, சின்ன காலனிக்கான மின்மாற்றியில் மின்சார துண்டிப்பு செய்துள்ளார்.
தொடர்ந்து, விவசாய நிலத்தின் மின் மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பு ஒயர்கள் பொருந்திய மின்கம்பம் மீது ஏறி, வேலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் ராஜேந்திரன் துாக்கி வீசப்பட்டார்.
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.