Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நண்பனை கொன்று புதைத்த மூவர் கைது

நண்பனை கொன்று புதைத்த மூவர் கைது

நண்பனை கொன்று புதைத்த மூவர் கைது

நண்பனை கொன்று புதைத்த மூவர் கைது

ADDED : ஜூன் 25, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
மறைமலை நகர், மறைமலை நகர் என்.ஹெச்., 1 சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 11ம் தேதி, நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிச் சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் கடந்த 14ம் தேதி, மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி வழக்கு பதிந்த போலீசார், விக்னேஷ் மொபைல் போனில் பேசிய நபர்களிடம் விசாரித்தனர்.

இது தொடர்பாக, மறைமலை நகர் அடுத்த கோகுலாபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 23, மற்றும் அவரது நண்பர்களான 17 வயது சிறுவன் மற்றும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தில்கோஷ்குமார் என்ற சிவா, 24, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், மது போதையில் விக்னேஷை கத்தியால் வெட்டி கொலை செய்து, கோகுலாபுரம் ஏரியில் புதைத்ததாக, அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கடந்த 11ம் தேதி, மறைமலை நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விக்னேஷ், விஸ்வநாதன், சிவா உள்ளிட்டோர் மது அருந்திய போது ஏற்பட்ட சண்டையில், விக்னேஷ் சிவாவை உதைத்து விட்டு சென்றுள்ளார்.

இதில் கோபமடைந்த சிவா, விஸ்வநாதனிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் இணைந்து திட்டமிட்டு, கோகுலாபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். பின், விக்னேஷையும் அழைத்து வந்து, கோகுலாபுரம் ஏரியில் மது அருந்தியுள்ளனர்.

விக்னேஷுக்கு போதை அதிகமானதும், இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிக் கொலை செய்து, அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்துஉள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக, 17 வயது சிறுவனும் இருந்துள்ளார்.

நேற்று காலை 11:30 மணிக்கு, செங்கல்பட்டு தாசில்தார் பூங்குழலி முன்னிலையில், விக்னேஷை புதைத்த இடத்தை குற்றவாளிகள் அடையாளம் காட்டினர்.

தொடர்ந்து, விக்னேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து, 17 வயது சிறுவன் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

விஸ்வநாதன் மீது செங்கல்பட்டு தாலுகா, மறைமலை நகர், மானாமதி, மயிலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us