ADDED : ஜூன் 22, 2024 11:42 PM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் இருந்து, கோனேரிகுப்பம், ஏனாத்துார் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் தாமல்வார் தெரு வழியாகச் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக, மூன்று மாதங்களுக்கும் மேலாக துர்நாற்றத்துடன் கழிவுநீர், வழிந்தோடுகிறது இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மாதக்கணக்கில் கழிவு நீர் வழிந்தோடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநராட்சி கமிஷனர் செந்தில்முருகன் கூறியதாவது:
காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
அடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.