/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை:இணைப்பு சாலையை தவிர்ப்பதால் விபத்து அபாயம் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை:இணைப்பு சாலையை தவிர்ப்பதால் விபத்து அபாயம்
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை:இணைப்பு சாலையை தவிர்ப்பதால் விபத்து அபாயம்
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை:இணைப்பு சாலையை தவிர்ப்பதால் விபத்து அபாயம்
அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை:இணைப்பு சாலையை தவிர்ப்பதால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 01:20 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையினை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் பணி, 2018ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டன.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள, தனியார் பெட்ரோல் பங்க், ஹோட்டல், கல்லுாரி, பொழுதுபோக்கு பூங்கா, தொழிற்சாலை உட்பட தனியார் பகுதிகளுக்கு செல்ல, 'மீடியன்' பகுதியில் இருந்து பிரிந்து செல்லும் வகையில் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு சாலையை பயன்படுத்தாமல் இந்த திடீர் பாதையை பயன்படுத்துவதால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை முன் அதிவிரைவு நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.
மேலும் இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையில் தண்டலம், செட்டிபேடு, திருமழிசை, நசரத்பேட்டை உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், 'பேரிகார்டு' அமைத்துஉள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதவிர சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில் இணைப்பு பகுதியில் உயரமாக வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 10 செ.மீ., உயரத்தில்தான் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற விதியை மீறி, அதிக உயரத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித நிறுவனங்களுக்கும் சாலை வசதி செய்யக்கூடாது. அப்பகுதியில் உள்ள இணைப்பு சாலையை பயன்படுத்தி தான் வாகனங்கள் சென்று வர வேண்டும்.
மேலும், இந்த சாலையில் வேகத்தடையோ, வேகத் தடுப்புகளோ அமைக்கக் கூடாது. வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் தான் இந்த சாலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.