Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு

பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு

பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு

பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 22, 2024 12:36 AM


Google News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான, நிர்வாக அனுமதி 2023 அக்டோபர் மாதம் வெளியாகியது.

இத்திட்டத்திற்கு ஏகனாபுரம் கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எடையார்பாக்கம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில், நில எடுப்பு செய்வதற்கான அறிவிப்பை, வருவாய் துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அடுத்தக்கட்ட பணிகளை தீவிரமாக மேற்கொள்கின்றனர்.

நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள, 5,700 ஏக்கர் நிலப்பரப்பை, நிர்வாக வசதிக்காக மூன்று மண்டலங்களாக பிரித்து, அதிலிருந்து 24 யூனிட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும், ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செயல்படுகிறது.

அதேசமயம், ஒவ்வொரு யூனிட்டிலும், ஒரு தாசில்தார், சர்வேயர் என, மொத்தம் 326 வருவாய் துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தேவைப்படும் 24 யூனிட்களுக்கு, 24 தாசில்தார்கள் தேவைப்படுகின்றனர்.

இதில், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட தாசில்தார்கள் பணியாற்றுகின்றனர். இதில், வெளிமாவட்ட தாசில்தார்கள் 4 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து தாசில்தார்களை அழைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்வதால், வருவாய் துறை சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாசில்தார்களை வழங்க, அம்மாவட்ட நிர்வாகங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கடிதம் கொடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40க்கும் மேல் தாசில்தார் பணியிடங்கள் காலியாக இருப்பதால், வேறு வழியில்லாமல் வெளி மாவட்டத்திலிருந்து அழைக்க வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு, வருவாய் துறை அலுவலர்கள் சங்கமும், வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், துணை தாசில்தார்களாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வருவாய் துறை அலுவலர்களின் இரு சங்கமும் கோரிக்கை வைக்கிறது.

ஆனால், நேரடியாக பணியில் சேர்ந்த உதவியாளர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கும் இடையேயான நீதிமன்ற வழக்குகள் பல, நிலுவையில் இருப்பதால் துணை தாசில்தார்களாகவும், உதவியாளர்களாகவும் வருவாய் துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

துணை தாசில்தார்களாக பணியாற்றுவோருக்கு, நீதிமன்ற வழக்கு காரணமாக பதவி உயர்வு வழங்க முடியாத காரணத்தால், வெளி மாவட்டங்களில் இருந்து, தாசில்தார்களை அழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு, மாவட்ட நிர்வாகம் ஆளாகியுள்ளது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீதிமன்ற உத்தரவு காரணமாக, தாசில்தாராக பதவி வழங்க முடியாமல் உள்ளது. இது, வருவாய் துறை ஊழியர்களுக்கும் தெரியும். இருப்பினும், பரந்துார் விமான நிலைய திட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்து தாசில்தார்களை அழைக்க வேண்டியுள்ளது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us