/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'டாஸ்மாக்'கில் அடிதடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை 'டாஸ்மாக்'கில் அடிதடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடிதடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடிதடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடிதடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
ADDED : ஜூன் 12, 2024 01:57 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபாபதி, 24. திருமணமாகாதவர். இவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்.எப்., எனும் எல்லை பாதுகாப்பு படை பணியில் சேர்ந்தார்.
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த அவர், 40 நாள் விடுப்பில், கனகசபாபதி கடந்த 24ம் தேதி, சொந்த ஊரான ஏரிவாய் கிராமத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நண்பரான ஆனந்தராஜ், 25, என்பவருடன், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் இயங்கும் 'டாஸ்மாக்' மதுபான கடைக்கு சென்றார்.
அங்கே மது அருந்திக் கொண்டிருந்தபோது, ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், 55, என்பவரிடம், ஆனந்தராஜ் ஹான்ஸ் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
அச்சமயம், அங்கு இருந்த நாய்க்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 40, அருண், 44 மற்றும் ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனி 44, வெங்கடேசன் 35 ஆகியோர் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக கூட்டாக சேர்ந்து ஆனந்தராஜ் மற்றும் கனகசபாபதியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில், கனகசபாபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.
படுகாயமடைந்த இருவரும், அங்கிருந்து, 'ராயல் என்ஃபீல்டு புல்லட்' வாகனத்தில் தப்பினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தை கனகசபாபதி ஓட்டி வர அதிக ரத்தப்போக்கு காரணமாக ஊத்துக்காடு,- புத்தகரம் இணைப்பு சாலை அருகே, கனகசபாபதி மயக்கமுற்று விழுந்தார்.
அப்பகுதியினர் அவர்களை மீட்டு 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம், காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி உயிர் இழந்ததாக தெரிவித்தார்.
கனகசபாபதியின் நண்பரான ஆனந்தராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கனகசபாபதியின் தந்தை அருள்ராஜ் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ், அருண், பழனி, வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.