Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை கையாள சமூக தணிக்கை சங்கத்திற்கு கூடுதல் பணிகள்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை கையாள சமூக தணிக்கை சங்கத்திற்கு கூடுதல் பணிகள்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை கையாள சமூக தணிக்கை சங்கத்திற்கு கூடுதல் பணிகள்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை கையாள சமூக தணிக்கை சங்கத்திற்கு கூடுதல் பணிகள்

ADDED : ஜூன் 11, 2024 02:12 AM


Google News
காஞ்சிபுரம் : சமூக தணிக்கை சங்கத்தினர் மத்திய, மாநில அரசு திட்டங்களை கூடுதலாக தணிக்கை செய்ய இருக்கின்றனர். இதன் மூலமாக, வரவு -- செலவு கணக்குகள் முறையாக கையாளப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இவ்வூராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.

இதில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன.

இந்த, 100 நாள் பணிகளை ஆண்டு தோறும், சமூக தணிக்கை சங்க பணியாளர்களின் மூலமாக ஆய்வு செய்து, தணிக்கை குறிப்புகள் எழுதப்படும்.

இதை, தணிக்கை தடை குறிப்புகளை, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சரி செய்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், பணி ஓய்வு பெறும் நேரத்தில், ஓய்வு அறிக்கை பெற முடியாத சூழல் ஏற்படும்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2014ம் ஆண்டு துவங்கிய சமூக தணிக்கை சங்க பணியாளர்கள் மூலமாக, பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்யப்பட்டுஉள்ளன.

இருப்பினும், சில குறைபாடுகளை சரி செய்ய முடியவில்லை.

இதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன், மாவட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், கடந்த ஆண்டு பிரதமர் வீடு கட்டும் திட்ட குறைபாடுகளை புகார் பெறுவதற்கு கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அந்த வரிசையில், சமூக தணிக்கை சங்க பணியாளர்கள் மூலமாக, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், 15வது நிதிக்குழு மத்திய மானியம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் மற்றும் பல திட்ட பணிகளை சமூக தணிக்கை சங்க பணியாளர்கள், இந்த ஆண்டு முதல் செய்ய உள்ளனர்.

இந்த, சமூக தணிக்கை சங்க பணியாளர்களின் மூலமாக மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை தணிக்கை செய்யும் போது, பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சரி செய்யப்படும் என, சமூக தணிக்கை பணியாளர்கள் இடையே கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சமூக தணிக்கை சங்க பணியாளர்களின் மூலமாக, நுாறு நாள் வேலை சமூக தணிக்கை செய்தது போல, மத்திய, மாநில அரசு திட்டங்களின் பணிகளை தணிக்கை செய்வதற்கு, சமூக தணிக்கை சங்க பணியாளர்கள், நடப்பாண்டு முதல் செய்ய உள்ளனர்.

இந்த திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதே நிலை தான் தமிழகம் முழுதும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us