Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலுாரில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு

திருக்கோவிலுாரில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு

திருக்கோவிலுாரில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு

திருக்கோவிலுாரில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 07, 2024 06:26 AM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலுார் நகரம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது கடலுாருக்கு அடுத்த நிலையில் இருந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் மலையமா நாட்டின் தலைநகரமாக இருந்தது. அரசியல் சூழ்ச்சி காரணமாக இன்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.முதலில் திருக்கோவிலுார் எந்த மாவட்ட எல்லையில் வருகிறது என்ற சந்தேகம் படித்தவர்களுக்கு மட்டுமல்ல அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருக்கோவிலுார் தொகுதியை ஒரே மாவட்டத்தில் வருவது போன்று மறுசீரமைப்பு அவசியம்.

திருக்கோவிலுாரில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து இருக்கும் சூழலில், தற்பொழுது பஸ் நிலையம் போதுமானதாக இல்லை. புதிய பஸ் நிலையத்தை உருவாக்கி, புறவழிச் சாலையுடன் இணையும் வகையில் சாலை வசதியை மேம்படுத்துவதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக வாகனங்கள் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவாகும் நிலையில், திருக்கோவிலுாரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை துவங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்தபோதே திருக்கோவிலுாரில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்ட பணிகளை தயார் செய்யப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்ந்திருக்கும் நிலையில் அதற்கான பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலுார் கடை வீதியில் பல ஆண்டுகளாக பயனற்று புதர் மண்டி கிடக்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான காந்தி திருமண மண்டபத்தை, நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி, வணிக வளாகம் அமைக்க வேண்டும். ஏரி மற்றும் தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கால்வாய் வசதியை நகரில் மேம்படுத்த வேண்டும். ஏரி பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்போது உள்ள உயர் மட்ட பாலம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்து விட்ட நிலையில், தரைபாலம் அருகே புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற அரசும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us