Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

ADDED : ஜன 22, 2024 12:46 AM


Google News
கள்ளக்குறிச்சி : சோமண்டார்குடி பகுதியில் கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள் ளன. சோமண்டார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக கள்ளக்குறிச்சிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பலரும் வந்து செல்கின்றனர்.

இப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி வந்து செல்ல குறுகிய வழியாக கோமுகி ஆற்றைக் கடந்து காரனுார் பஸ் நிறுத்தம் வழியாக செல்கின்றனர்.

அதேபோல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் நடந்து ஆற்றைக் கடந்து செல்கின்றனர். கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றைக் கடக்கும் போது பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பருவ மழையின் போது கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும். அந்த நேரத்தில் மோ.வன்னஞ்சூர், ரோடுமாந்துார் சாலை வழியாக நீண்ட துாரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது.

ஒரு சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தையும் உணராமல் கடும் சிரமங்களுக்கு இடையே சிலர் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதுபோன்ற சூழலில் தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.

சோமண்டார்குடியில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்றின் அருகே கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழாகாண தயாராக உள்ளது. கல்லுாரி செயல்படும் வகையில் மோ.வன்னஞ்சூர், மோகூர், ரோடுமாமந்துார், வாணியந்தல், அகரகோட்டாலம், சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சோமண்டார்குடி கிராமம் வழியாக ஆற்றைக் கடந்து கல்லுாரிக்கு சென்று வரும் நிலை உள்ளது. பருவ மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது மாணவர்கள் நீண்ட துாரம் சுற்றிச் செல்ல நேரிடும்.

எனவே, கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி சோமண்டார்குடி பகுதியில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us