Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கேள்வி கேட்டால் 'ஆப்சென்ட்டா'? போக்குவரத்து ஊழியர்கள் ஆவேசம்

கேள்வி கேட்டால் 'ஆப்சென்ட்டா'? போக்குவரத்து ஊழியர்கள் ஆவேசம்

கேள்வி கேட்டால் 'ஆப்சென்ட்டா'? போக்குவரத்து ஊழியர்கள் ஆவேசம்

கேள்வி கேட்டால் 'ஆப்சென்ட்டா'? போக்குவரத்து ஊழியர்கள் ஆவேசம்

ADDED : ஜன 03, 2024 11:45 AM


Google News
திருப்பூர்: திருப்பூர் அரசு போக்குவரத்து கழக டிப்போ - 2 கிளை அலுவலகத்துக்குள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், நடத்துனர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த மண்டல பொது மேலாளரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை - 2ல், மேலாளர் - பணிபுரியும் டிரைவர், நடத்துனர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 'தனிநபர் முகம் பார்த்து விடுப்பு அளிக்கின்றனர். கேள்வி கேட்டால் 'ஆப்சென்ட்' போடப்படுகிறது,' என தொடர்ந்து ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கிளை மேலாளர் நடவடிக்கையை கண்டித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், கிளை மேலாளர் அறை முன், நேற்று மதியம் திடீர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டோர், 'விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். விண்ணப்பித்து விடுப்பு எடுத்த பின், ஆப்சென்ட் போட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, பொது மேலாளரிடம் தெரிவித்த போது, இதுபோன்ற தவறு நடக்கக்கூாடது, என கிளை மேலாளாரை அழைத்து அறிவுறுத்தினார்.

ஆனால், தற்போது வரை ஆப்சென்ட் போடுவதும், விடுப்பு வழங்காததும் தொடர்கிறது. எனவே, கிளை மேலாளரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,' என்றனர். போராட்டம் குறித்து அறிந்த, மண்டல பொது மேலாளர் மாரியப்பன் வந்தார். அவரிடம், 'நீங்கள் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்; ஆனால், கிளை அதிகாரிகள் அதன்படி, நடந்து கொள்வதில்லை. நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை,' என ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மண்டல பொது மேலாளர் மாரியப்பன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அவர் பேசுகையில்,' விடுப்பு எடுக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி விடுப்பு கேட்பவருக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இனி, உங்களுக்கு விடுப்பு, பணி வழங்குவதில் ஏதேனும் பிரச்னை, ஆப்சென்ட் வழங்கப்பட்டால், நேரடியாக என்னிடம் வந்து சொல்லுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்,' என்றார். இதனால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலைந்து, பணிக்கு திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us