ADDED : ஜன 25, 2024 01:36 AM
பழநி:பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை தொடர்ந்து நேற்று (ஜன.24 ) இரவு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா கிழக்கு ரத வீதி பெரியநாயகி கோயிலில் ஜன.19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
விழாவின் ஆறாம் நாளான நேற்று இரவு 7:50 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் நடைபெற்றது.இதை தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
ஏழாம் நாளான இன்று தோளுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருள தீர்த்தம் கொடுத்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பத்தாம் நாளான ஜன.28ல் தெப்பத்தேரோட்டம், இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.