Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தரமற்ற ரோடுகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,கவுன்சிலர் ஆவேசம்

தரமற்ற ரோடுகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,கவுன்சிலர் ஆவேசம்

தரமற்ற ரோடுகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,கவுன்சிலர் ஆவேசம்

தரமற்ற ரோடுகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,கவுன்சிலர் ஆவேசம்

ADDED : ஜன 04, 2024 02:43 AM


Google News
திண்டுக்கல்: ''புதிதாக அமைக்கப்பட்ட ரோடுகள் தரமானதாக இல்லை. ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்'' என திண்டுக்கல் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்.

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை மேயர் ராஜப்பா (தி.மு.க.,), கமிஷனர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் வரலட்சுமி, செயற்பொறியாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்


ஆனந்த் (தி.மு.க.,): தியேட்டர்கள் முன்பு பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான வாகன பார்க்கிங்களில் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும்.

மேயர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்திக் (தி.மு.க.,): ரவுண்ட் ரோடு புதிய ரோடுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

மேயர்: சப்ஜெட்டில் இருப்பதை மட்டும் பேசுங்கள். வார்டு பிரச்னைகளுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

தனபால் (பா.ஜ.,): விவேகானந்தாநகரில் 7 ஆண்டுகளுக்கு முன் பூங்கா கட்டப்பட்டு பாதி பணியுடன் கிடப்பில் உள்ளது. பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் மக்கள் பயனடைவர்.

மாரியம்மாள் (மார்க்சிஸ்ட்): மழை நேரத்தில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

மேயர்: நடவடிக்கை எடுத்தப்படும்.

தனபால் (பா.ஜ.,): அண்ணாநகரில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்யாமல் உள்ளது. மற்றபகுதி தொட்டிகளை பராமரிப்பு செய்யும் அதிகாரிகள் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.

மேயர்: உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்): ரோடு விரிவாக்க பணிகளின் போது நெடுஞ்சாலைத்துறையினர் பழைய மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

ஜான்பீட்டர் (தி.மு.க.,): அனுமந்தநகர் பாலம், திருச்சி ரோடு ரயில்வே பாலம்,கரூர் ரோடு பாலம் உள்ளிட்ட பாலங்கள் பராமரிப்பின்றி உள்ளது. சர்வீஸ் ரோடுகளும் சேதமாக உள்ளது. ஆண்டுகள் கடந்தும் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை.

கணேசன் (மார்க்சிஸ்ட்): நாய், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நகரில் எந்நேரமும் சுற்றித்திரிகின்றன.

பாஸ்கரன் (அ.தி.மு.க.,): கழிப்பறை மோசமாக உள்ளது. புகாரளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் என் வார்டை புறக்கணிக்கிறீர்கள். ரோடுகள் புதிதாக அமைத்த சில மாதங்களிலே சேதமாகிறது. ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்.

மேயர்: கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள்.

தனபால், (பா.ஜ.,): 14வது வார்டில் 114 தெரு நாய்கள் சுற்றுகின்றன. இதைப்பிடிக்க மாநகராட்சி முன்வரவில்லை. இரவு நேரத்தில் ரோட்டில் நடக்கவே முடியவில்லை.

மேயர்:நகரில் 7000 தெருநாய்கள் உள்ளது. 3500க்கு மேலான நாய்களுக்கு கருத்தடை,ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டம் துவங்குவதற்கு முன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us