/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கருணாநிதி ஆட்சியில் மினி பஸ்களை இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா? விண்ணப்பங்களை முடக்கியதால் வேதனையோடு காத்திருப்பு கருணாநிதி ஆட்சியில் மினி பஸ்களை இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா? விண்ணப்பங்களை முடக்கியதால் வேதனையோடு காத்திருப்பு
கருணாநிதி ஆட்சியில் மினி பஸ்களை இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா? விண்ணப்பங்களை முடக்கியதால் வேதனையோடு காத்திருப்பு
கருணாநிதி ஆட்சியில் மினி பஸ்களை இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா? விண்ணப்பங்களை முடக்கியதால் வேதனையோடு காத்திருப்பு
கருணாநிதி ஆட்சியில் மினி பஸ்களை இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா? விண்ணப்பங்களை முடக்கியதால் வேதனையோடு காத்திருப்பு
ADDED : மே 18, 2025 04:31 AM
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், மினி பஸ் இயக்கியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களுக்கான வழித்தடத்தை நீட்டித்து அனுமதி கொடுக்க, தமிழக போக்குவரத்து துறை முன்னுரிமை கொடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1997ல் மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது, மக்களிடம் வரவேற்பை பெற்றது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரை ஒட்டியுள்ள பகுதிகள், நெடுந்துார வீதிகளில் வசிப்பவர்களும், நகர்ப்பகுதிக்கு வந்து செல்ல உபயோகமாக இருந்தது.
நிர்வகிப்பதற்கு போதுமான வருவாய் கிடைக்காத காரணத்தாலும், பொருளாதார ரீதியாக மினி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதாலும், படிப்படியாக இச்சேவை குறைய ஆரம்பித்தது; தற்போதைய சூழலில், மாநில அளவில் ஆங்காங்கே, ஒரு சில நகரங்களில் மட்டுமே இச்சேவை செயல்பாட்டில் இருக்கிறது.
அரசாணைப்படி அனுமதி
இச்சூழலில், மினி பஸ் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்து, விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் போக்குவரத்து துறை இறங்கியுள்ளது; வரும் ஜூனில் இத்திட்டத்தை துவக்கி வைப்பதற்கான ஏற்பாடு நடக்கிறது.
இத்திட்டம், மீண்டும் முடங்காமல் இருக்க, மினி பஸ் உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். மினி பஸ் வழித்தடத்தின் அதிகபட்ச துாரம் - 25 கி.மீ., என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழித்தட துாரத்தில் நிர்ணயித்துள்ள கி.மீ., முடிந்திருந்தாலும், அதற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனைகள் அல்லது முக்கியமான இடங்கள் இருந்தால், அதுவரை அனுமதியை நீட்டித்து வழங்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், வழித்தடங்களின் துாரத்தை இறுதி செய்ய, அரசு துறையினர் ஆய்வுக்கு வரும்போது, அரசு போக்குவரத்து கழகத்தினர் ஆட்சேபம் தெரிவிப்பதால், விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கிராமப்புற மக்களுக்கான நலனை கருத்தில் கொண்டு, அரசாணைப்படி அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
அடுத்ததாக, பழைய மினி பஸ் திட்டத்தில் அனுமதி பெற்றவர்கள், புதிய திட்டத்துக்கு மாறுவதற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து, பழைய அனுமதி சீட்டை சரண் செய்ய வேண்டும்.
கிடப்பில் விண்ணப்பம்
புதிய வழித்தடத்தில், சேவை செய்யாத பாதை துாரம் குறைந்தபட்சம், 1.5 கி.மீ., இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிய வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் மீது மட்டுமே, போக்குவரத்து துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.
ஏற்கனவே மினி பஸ் இயக்கியவர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல், கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பழைய மினி பஸ் திட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, முதலில் அனுமதி கொடுத்து விட்டு, அதன் பிறகே புதியவர்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இதற்கு முன், ஒரு வழித்தடத்தில் எத்தனை பஸ்கள் வேண்டுமானாலும் இயக்கலாம் என்ற நடைமுறை இருந்தது; இப்போது, பொதுமக்கள் பயணத்தை தோராயமாக கணக்கிட்டு, ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மட்டும் அனுமதிக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இதன்படி, 'பர்மிட்' வழங்கப்பட்டு விட்டால், ஏற்கனவே இயக்கியவர்களுக்கு அனுமதி கிடைக்காத சூழல் இருக்கிறது.
அதனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்து, இச்சேவையில் ஈடுபட்டுள்ள பழைய மினி பஸ் ஆபரேட்டர்களுக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து அனுமதி வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நமது நிருபர் -