Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாங்க ஆளின்றி காட்சி பொருளான அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள்: போக்குவரத்து வசதியில்லை என குற்றச்சாட்டு

வாங்க ஆளின்றி காட்சி பொருளான அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள்: போக்குவரத்து வசதியில்லை என குற்றச்சாட்டு

வாங்க ஆளின்றி காட்சி பொருளான அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள்: போக்குவரத்து வசதியில்லை என குற்றச்சாட்டு

வாங்க ஆளின்றி காட்சி பொருளான அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள்: போக்குவரத்து வசதியில்லை என குற்றச்சாட்டு

ADDED : செப் 01, 2025 02:23 AM


Google News
பாப்பிரெட்டிப்பட்டி;பொம்மிடி அருகே, 172.94 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, 280 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை மக்கள் வாங்காததால், பராமரிப்பின்றி பாழடைந்து காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ளது கொண்டகரஹள்ளி ஊராட்சி. இங்கு குளியனுார், சந்தனுார் மேடு, திருவள்ளுவர் நகர், வத்தல்மலை, கொண்டகரஹள்ளி உள்ளிட்ட, 21 கிராமங்கள் உள்ளன. இதில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம் மக்களின் பிரதான தொழில் விவசாயம். இங்கு, வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில், தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், 172.94 கோடி ரூபாய் மதிப்பில், 280 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

கடந்த ஓராண்டுக்கு முன், இந்த குடியிருப்புகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வீடுகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்கள், 1.62 லட்சம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள அரசு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. திறப்பு விழா கண்டு ஓராண்டுக்கு மேலாகியும், இப்பகுதியிலுள்ள மக்கள் இங்கு குடியேறவும், வீடுகள் வாங்கவும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது வரை, 5 வீடுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. 275 வீடுகள் விற்பனை ஆகவில்லை. இதனால் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஓராண்டுக்கு மேலாக பூட்டப்பட்டு பாழடைந்து, காட்சி பொருளாக உள்ளது.

இதுகுறித்து சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பூளையானுார் உள்ளிட்ட, 8 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலான வீடுகள் விற்கப்பட்டு உள்ளது. ஆனால் கொண்டகரஹள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் போக்குவரத்து வசதியில்லாமல் உள்ளது. எவ்வித வசதியில்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள், 1.62 லட்சம் ரூபாய் செலுத்தி வீடு வாங்கும் நிலையில் இல்லாமல் உள்ளனர். எனவே, பாழடைந்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us