ADDED : ஜூன் 14, 2024 01:28 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசால், தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கென, 63 விடுதிகள் செயல்படுகிறது. இதில், பள்ளி மாணவர்களுக்கு, 27, மாணவியருக்கு, 23 விடுதிகன் உள்ளன. கல்லுாரி மாணவர்களுக்கு, 8, மாணவியருக்கு, 5 என மொத்தம், 63 விடுதிகள் உள்ளன. இவற்றில், பள்ளி, கல்லுாரி பட்ட மேற்படிப்பு, பட்டபடிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் விடுதியில் சேர தகுதியுடையவர்கள்.
மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வசிக்கும் இருப்பிடத்திலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் துாரம், 8 கி.மீ., மேல் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நுால்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ அல்லது தர்மபுரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, பள்ளி மாணவர்கள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் வரும், 14க்குள் செலுத்த வேண்டும். கல்லுாரி மாணவர்கள், வரும், 15க்குள் அந்தந்த விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.