Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிதாக உருவான மைதானங்களுக்கு நிதி விடுவிப்பது... எப்போது: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அலட்சியம்

புதிதாக உருவான மைதானங்களுக்கு நிதி விடுவிப்பது... எப்போது: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அலட்சியம்

புதிதாக உருவான மைதானங்களுக்கு நிதி விடுவிப்பது... எப்போது: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அலட்சியம்

புதிதாக உருவான மைதானங்களுக்கு நிதி விடுவிப்பது... எப்போது: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அலட்சியம்

ADDED : செப் 15, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி வருகையின்போது உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு நிதியை விடுவிக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உட்பட 14 ஒன்றியங்களில் 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா 20 லட்சம் ரூபாயில் விளையாட்டு மைதானங்கள் உட்பட அடிப்படை வசதிகள் அமைக்கப் பட்டன.

அதில், விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காலப்போக்கில் பழுதாகின. இதனால் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் கிராமப்புற மாணவர்கள் சிரமமடைந்தனர்.

அதன்பின், ஜெ., ஆட்சியில் அம்மா விளையாட்டுப் பூங்கா என்ற பெயரில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி சாதனங்களுடன், விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.

இந்நிலையில், கிராமங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைக்க வேண்டும் என கடந்தாண்டு நவம்பரில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அப்போது, துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி, கடலுாருக்கு வருகை தந்தார். துணை முதல்வரிடம் நற்பெயர் பெரும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தலா 10 ஊராட்சிகளை முன்மாதிரியாக தேர்ந்தெடுத்து, புதிதாக 140 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இப்பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் கிராமங்களில் இருந்து மாவட்ட, மாநில போட்டிகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மற்றும் தீய பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் வாய்ப்பாக அமைந்தது. ஆனால், 10 மாதங்களுக்கு மேலாகியும் மைதானங்களை உருவாக்கியதற்கான பணிகளுக்கான நிதி இதுநாள் வரை விடுவிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

குறிப்பாக, 14 ஒன்றியங்களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற ஒன்றியங்களில் நிதி முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்., தலைவர்கள் பதவியில் இருந்ததால், மைதானங்கள் உருவாக்கும் பணி துரிதமாக நடந்து முடிந்தது. தற்போது, அவர்களுக்கு பதவிக்காலம் முடிந்த நிலையில், இதுநாள் வரை நிதி விடுவிக்காமல் உள்ளது. மேலும், ஊராட்சி செயலாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், புதிதாக உருவாக்கப்பட்ட மைதானங்களும் பராமரிப்பின்றி பாழாகும் நிலை உள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு உரிய நிதியை விடுவித்தும், பராமரிப்பின்றி பாழாகி வரும் மைதானங்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில், 'நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மண் சார்ந்த பணியாக விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கேற்ப உபகரணங்களை விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துணை முதல்வர் உதயநிதி, கடலுார் வந்தபோது வழங்கிச் சென்றார்.

15வது மானிய நிதிக்குழுவில் நிதி விடுவிக்குமாறு அரசு அறிவித்தும், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அலட்சியத்தால் நிதி வழங்கவில்லை. ஊராட்சிகளில் போதுமான நிதி இருப்பதால், உடனடியாக நிதியை விடுவிக்கலாம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us