Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

ADDED : ஜூலை 02, 2025 06:44 AM


Google News
கடலுார் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ள நிலையில், முன்னேற்றம் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, மாவட்டத்தில் உள்ள 520 அரசு பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மாதம் தமிழ், கணிதம், ஆங்கிலம் தேர்வு நடத்தப்பட்டது.

இதில், 7 மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்த மாணவர்கள் 'ஸ்லோ லேனர்ஸ்' என தரம் பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி' என்ற திட்டத்தின் மூலம் கற்றல் பணிகளை மேற்கொள்ள கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில், அம்மாணவர்களுக்கு பட்டாதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 10 முதல் 100 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட்டு தனி அறையில் பாடம் நடத்தப்படுகிறது.

பாடத்திட்டம் அவர்களுக்கு எந்த அளவு புரிகிறது என அவ்வப்போது ஆசிரியர்கள் சோதனை தேர்வு நடத்தி சோதிக்க வேண்டும்.

மேலும், அவர்களுக்கு ஆசிரியர்கள் தனித்தனியாக கேள்விதாள் தயார் செய்ய வேண்டும். இதுதவிர திறன் மேம்பாடு வெளிக்கொண்டு வரும் விதமாக மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை கற்றல் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தால், 'ஸ்லோ லேனர்ஸ்' பயடைவர் என்றாலும், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்துவதால், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கிறது.

எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை முன்வர வேண்டும். இல்லையென்றால், நடப்பாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'இந்த திட்டம் நம் மாவட்டத்தில் மட்டும் கலெக்டரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை கற்பித்தல் பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

இந்த திட்டத்தில் பாடம் நடத்துவதற்காக, பத்தாம் வகுப்பு மாணவர்களின் வகுப்புகளில் இருந்து என்னை விடுவித்து விட்டனர். இதனால், மற்றொரு ஆசிரியர் எனது பாடங்களை கூடுதலாக கவனித்துக் கொள்கிறார்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us