/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரியை ஆழப்படுத்துவது ... எப்போதுஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரியை ஆழப்படுத்துவது ... எப்போது
ஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரியை ஆழப்படுத்துவது ... எப்போது
ஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரியை ஆழப்படுத்துவது ... எப்போது
ஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரியை ஆழப்படுத்துவது ... எப்போது
ADDED : ஜூன் 03, 2024 04:46 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் முல்லா ஏரியில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி, ஓராண்டிற்கு மேலாகியும் இதுவரை அந்த இடத்தில் குளம் வெட்டும் பணி துவங்காததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், மற்றும் கழிவுநீர் கால்வாய்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதன்காரணமாக, மழை காலங்களில் வீட்டிற்குள் மழைநீர் உட்புகும் நிலை உள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டுமென தனிநபர் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உத்தரவு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், தனிநபர் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதன்காரணமாக, விருத்தாசலம் - கடலுார் சாலையில் 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள முல்லா ஏரியில் ஆக்கிமித்து கட்டப்பட்டிருந்த 66 கடைகள் மற்றும் வீடுகள், ஆலடி சாலையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டுமென அதிரடியாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
இதனால், சம்பந்தப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து கட்டடங்களை இடித்துகொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், யாரும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராததால், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய தாசில்தார் தனபதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அடிக்கடி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 கட்டங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதில், விருத்தாசலம் - கடலுார் சாலையில் உள்ள முல்லா ஏரியில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.
ஆனால், ஆலடி சாலையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
மேலும், முல்லா ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓராண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை அந்த இடத்தை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்குவதிற்கான பணி துவங்கவில்லை.
இதனால், வரும் காலங்களில் தனிநபர்கள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிமிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்பு அகற்றிய முல்லா ஏரி பகுதியில் குளம் வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆலடி சாலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.