ஐம்பொன் சிலைகள் விருதையில் பறிமுதல்
ஐம்பொன் சிலைகள் விருதையில் பறிமுதல்
ஐம்பொன் சிலைகள் விருதையில் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2025 11:55 PM
விருத்தாசலம்: கும்பகோணத்தில் இருந்து காரில் எடுத்து வரப்பட்ட ஐம்பொன் சிலைகளை, விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பாலக்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த (டி.என்.22. டி.எம்.7817) என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஆதி சங்கரர், பேய் ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கை ஆழ்வார் என, ஐந்து ஐம்பொன் சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை விருகம்பாக்கம் அறம் வளர்த்த நாயகி சேவை மையத்தில் இருந்து சேதமடைந்த ஐம்பொன் சிலைகளை கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டதும், அங்கு சிலைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்வதும் தெரிந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால், சந்தேகமடைந்த போலீசார் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் எடுத்து வந்தனர். பின், சிலை தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சிலை தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், ஐம்பொன் சிலைகள், அறம் வளர்த்த சேவை மையத்திற்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.