Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க 44 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க 44 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க 44 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க 44 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜன 08, 2025 05:34 AM


Google News
பெண்ணாடம் : பெண்ணாடம் வருவாய் குறுவட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 44 கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, மேற்கு, தொழுதூர், பெண்ணாடம் என 4 குறுவட்டங்கள் உள்ளன.

அதில், திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தில் 25; மேற்கு குறுவட்டத்தில் 19; தொழுதூரில் 21; பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 என, மொத்தம் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மற்ற குறுவட்டங்களை விட இரண்டு மடங்கு அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே உள்ளார்.

இதனால் பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் சான்றிதழ் வழங்குவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, விவசாயம் சார்ந்த கணக்கெடுப்பு, வருவாய் கிராமங்களில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கலவரங்கள் உள்ளிட்ட அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்படுவது தொடர்கிறது.

நிர்வாக காரணங்களுக்காக பெண்ணாடம் வருவாய் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, கிராம மக்கள், ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

பெண்ணாடம் குறுவட்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுவது தொடர்கிறது.

எனவே, குறுவட்ட கிராம மக்கள் நலன் கருதி, பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us