Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெடுஞ்சாலையோரம் கூடும் வாரச்சந்தை

நெடுஞ்சாலையோரம் கூடும் வாரச்சந்தை

நெடுஞ்சாலையோரம் கூடும் வாரச்சந்தை

நெடுஞ்சாலையோரம் கூடும் வாரச்சந்தை

ADDED : ஜூன் 06, 2025 11:15 PM


Google News
பொள்ளாச்சி,; நெடுஞ்சாலை ஓரத்தில் கூடும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், விபத்து அபாயமும் அதிகரிக்கிறது.

பொள்ளாச்சியில் இருந்து, முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடத்தில், ஒவ்வொரு கிழமைகளிலும், வாரச்சந்தை அமைக்கப்படுகிறது. குறிப்பாக, ஊஞ்சவேலம்பட்டி, மின்நகர், நல்லுார், வஞ்சியாபுரம்பிரிவு, ஐஸ்வர்யாநகர் என, பல இடங்களில் நெடுஞ்சாலை ஓரத்தில் வாரச்சந்தை அமைக்கப்படுகிறது.

சந்தையில், அந்தந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளால் எடுத்து வரப்படும் காய்கறிகளை வாங்கி, சில்லரை வியாபாரம் செய்கின்றனர். ஆனால், காய்கறிகள் வாங்க வருவோர், தங்களது வாகனங்களை, ரோட்டோரம், தாறுமாறாக நிறுத்திச்செல்கின்றனர்.

அவ்வழித்தடத்தில், செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள், பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். மேலும், வாகனத்தை திடீரென நகர்த்தும் போதும், வாகனங்கள் வருவதை கவனிக்காமல், மக்கள் ரோட்டை கடக்கும் போதும் விபத்து ஏற்படுகிறது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:

வாரச்சந்தையின்போது, ரோட்டோரம் ஒன்று கூடி நிற்கும் மக்கள், சாலையை கடக்கும் வாகனங்களை கண்டு கொள்வதும் கிடையாது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள், திடீரென சாலையை கடக்க முற்படுவதால், விபத்தும் ஏற்படுகிறது.

போதிய அளவிலான திறந்தவெளியில், சந்தை அமைக்க வேண்டும். சிலர் லாப நோக்கத்துடன் தனியார் மற்றும் அரசு நிலத்தை கண்டறிந்து, கடைகளை அமைக்கவும், வியாபாரிகளிடம் ஒரு கடைக்கு, 200 முதல் 300 ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் புகார் எழுகிறது.

நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை கண்டறிந்து, வாரச்சந்தை அமைப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us