Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'ஊராட்சியாகவே செயல்படுகிறோம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்'

'ஊராட்சியாகவே செயல்படுகிறோம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்'

'ஊராட்சியாகவே செயல்படுகிறோம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்'

'ஊராட்சியாகவே செயல்படுகிறோம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்'

ADDED : ஜன 26, 2024 11:07 PM


Google News
கருமத்தம்பட்டி: ''ஊராட்சியாகவே தொடர விரும்புகிறோம்; நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்,'' என, கணியூர், கிட்டாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டங்களில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கிட்டாம்பாளையம் ஊராட்சி வினோபா நகரில், தலைவர் சந்திரசேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

பொதுமக்கள் தரப்பில், 'கிட்டாம் பாளையம் ஊராட்சியாகவே தொடர வேண்டும். கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என, கோரிக்கை விடுத்தனர். அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 'நகராட்சி வேண்டாம்; ஊராட்சியே போதும்' எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்டனர்.

தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அவர்களை சமாதானம் செய்தனர். பின், ஊராட்சியாகவே தொடர்ந்து செயல்படவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த 26ம் தேதி கருமத்தம்பட்டி நகராட்சி கூட்டத்தில், எல்லை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, தலைவர் மற்றும் துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கணியூரிலும் தீர்மானம்


கணியூர் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் வேலுசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் காசிநாதன், பி.டி.ஓ., முத்துராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

வார்டு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், 'கணியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது அல்லது அருகில் உள்ள நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தரம் உயர்த்தப்பட்டால், வீட்டு வரி, குடிநீர் கட்டணம், வரைபட கட்டணம் உள்ளிட்டவைகளை அதிகரிக்கும். 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மத்திய அரசு நேரடியாக வழங்கும் மானியத்துடன் கூடிய வளர்ச்சி நிதிகள் கிடைக்காது. அதிகாரிகளை அணுகுவதில் காலதாமதம் ஏற்படும். பிரச்னைக்கு உடனடி தீர்வும் கிடைக்காது. அதனால், ஊராட்சியாகவே தொடர வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மக்களின் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us