Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ரோலெக்ஸ்' யானையை பிடிக்க 2 கும்கிகள் விவசாயிகள் கோரிக்கைக்கு துரித நடவடிக்கை

'ரோலெக்ஸ்' யானையை பிடிக்க 2 கும்கிகள் விவசாயிகள் கோரிக்கைக்கு துரித நடவடிக்கை

'ரோலெக்ஸ்' யானையை பிடிக்க 2 கும்கிகள் விவசாயிகள் கோரிக்கைக்கு துரித நடவடிக்கை

'ரோலெக்ஸ்' யானையை பிடிக்க 2 கும்கிகள் விவசாயிகள் கோரிக்கைக்கு துரித நடவடிக்கை

ADDED : செப் 07, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்துார் : கோவை அருகே நரசீபுரம் சுற்றுப்பகுதியில், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும், 'ரோலெக்ஸ்' என்றழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானையை பிடிக்க, 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன.

போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால், விளைநிலங்களில் தினமும் சேதம் ஏற்படுகிறது. காட்டு யானை தாக்கி, மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், விராலியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட ஒற்றை காட்டு யானைகள் உள்ளன.

நரசீபுரம் வனப்பகுதியில் உள்ள ஆண் காட்டு யானை, தினமும் விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களையும், வீடுகளையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. மனிதர்களையும் தாக்கி வருகிறது. இந்த காட்டு யானையை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு சிரமமாக உள்ளது. இந்த யானையை, 'ரோலெக்ஸ்' என பெயரிட்டு, அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். நீண்ட நாட்களாக, சேதங்களை ஏற்படுத்தி வரும் அந்த யானையை பிடித்து, இட மாற்றம் செய்ய வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இச்சூழலில், சில நாட்களுக்கு முன், நரசீபுரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி, முதியவர் படுகாயம் அடைந்தார். வனத்துறையை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்குள் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உறுதியளித்தார்.

வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அனுமதி அளித்ததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகள், நேற்று முன்தினம் இரவு, தொண்டாமுத்துார் அடுத்த தாளியூர், யானைமடுவு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வனத்துறையினர் கூறுகையில், 'பிடிக்க வேண்டிய யானையை, சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சரியான நேரம் கிடைத்ததும், மயக்க ஊசி செலுத்தி, பிடிக்கும் பணிகள் துவங்கப்படும். மருத்துவ குழுவினர், வனத்துறையினர், 2 கும்கி யானைகள், 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us