Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் அறிவுரை

தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் அறிவுரை

தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் அறிவுரை

தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் அறிவுரை

ADDED : மார் 25, 2025 09:53 PM


Google News
பெ.நா.பாளையம்; மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ள வேண்டும் என, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இம்மாதம், 28ம் தேதி முதல் ஏப்., 15 வரை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடக்கிறது. இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த, 81 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

முதன்முதலாக பொது தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் பேசுகையில், ''மாணவ, மாணவியர் மன தைரியத்துடன், தன்னம்பிக்கையுடன் பொது தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

தேர்வு அறைகளில், அரசு அறிவித்த நடைமுறைகளை பின்பற்றி ஒழுக்கமாக நடக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் பதில் அளிக்கும் முன் வினா எண் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவுகள் ஆகியவற்றை தெளிவாக எழுதி, பதிலளித்தல் வேண்டும்.

தேர்வு காலங்களில் இரவு நேரங்களில், அதிக நேரம் கண் விழித்து படித்தல் கூடாது. இதனால் உடல், மனம் களைப்படைந்து தேர்வு அறைகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகலாம். உணவு உண்ணும் முறைகளில் கட்டுப்பாடு அவசியம்.

ஒவ்வாத உணவுகள் என்றால், அதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால், செயற்கையான குளிர்பானங்களை தவிர்த்து, இளநீர், மோர், அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்'' என்றார்.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு பாடப்பிரிவின் ஆசிரியர்களும், தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us