Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சோலையாறில் இருந்து உபரி நீர் திறப்பு; நல்லாறு அணை கட்ட கோரிக்கை

சோலையாறில் இருந்து உபரி நீர் திறப்பு; நல்லாறு அணை கட்ட கோரிக்கை

சோலையாறில் இருந்து உபரி நீர் திறப்பு; நல்லாறு அணை கட்ட கோரிக்கை

சோலையாறில் இருந்து உபரி நீர் திறப்பு; நல்லாறு அணை கட்ட கோரிக்கை

ADDED : ஜூன் 27, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
வால்பாறை; சோலையாறு அணை நிரம்பியதையடுத்து, மதகுகள் வழியாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. சோலையாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சோலையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அதன்பின், நள்ளிரவில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை, 163.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 6,279 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு, 2,000 கனஅடி வீதம் தண்ணீர் கேரளாவுக்கு உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 4.15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தமிழக - கேரள மாநில ஒப்பந்தப்படி, ஆண்டு தோறும், சோலையாறு அணையில் இருந்து, 12.3 டி.எம்.சி., தண்ணீரும், ஆழியாறில் இருந்து 7.25 டி.எம்.சி., தண்ணீரும் கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.

கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்தால், சோலையாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் வழங்க தேவையில்லை என்கிறது ஒப்பந்தம். ஆனால், இடைமலையாறு அணை திட்டம் நிறைவு செய்யப்பட்டாலும், கேரளா அரசு சோலையாறில் இருந்து தொடர்ந்து தண்ணீர் பெறுகிறது. அதனால், கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

மேலும், சோலையாறு அணை நிரம்பும் போது, மதகு வழியாக உபரி நீர் வெளியேற்ற வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, மேல்நீராறில் இருந்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், நல்லாறு அணை திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். அப்போது, சோலையாறில் உபரிநீர் வெளியேற்றும் நிலை உருவாகாது.

இவ்வாறு, கூறினார்.

பதிவான மழையளவு!


நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:

சோலையாறு - 87, பரம்பிக்குளம் - 52, ஆழியாறு - 33, வால்பாறை - 87, மேல்நீராறு - 121, கீழ்நீராறு - 81, காடம்பாறை - 18, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 40, வேட்டைக்காரன்புதுார் - 32, மணக்கடவு - 35, துாணக்கடவு - 37, பெருவாரிப்பள்ளம் - 40, நவமலை -18, பொள்ளாச்சி - 18 என்ற அளவில் மழை பெய்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us