Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ களி போன்று மாறிய தரமற்ற சேமியா: சாப்பிட முடியாமல் திணறும் மாணவர்கள்

களி போன்று மாறிய தரமற்ற சேமியா: சாப்பிட முடியாமல் திணறும் மாணவர்கள்

களி போன்று மாறிய தரமற்ற சேமியா: சாப்பிட முடியாமல் திணறும் மாணவர்கள்

களி போன்று மாறிய தரமற்ற சேமியா: சாப்பிட முடியாமல் திணறும் மாணவர்கள்

ADDED : அக் 17, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தரமில்லாமல் உள்ளதாக ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில், 'முதல்வரின் காலை உணவு திட்டம்' கடந்த, 2022 செப். 15ல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில், வெள்ளை ரவை, சேமியா தரமில்லாமல் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காலை நேரத்தில் பசியோடு வரும் மாணவர்கள், உணவை உட்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:

வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில், தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில், வெள்ளை ரவை, சேமியா போன்றவை வழங்கப்படுகிறது.அது தரமில்லாமல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சேமியா எவ்வாறு தயாரித்தாலும், களி போல மாறிவிடுவதால் மாணவர்கள் உட்கொள்ள மிகுந்த சிரமப்படுகின்றனர்.

சேமியா கட்டி, கட்டியாக இருப்பதால் அதை சாப்பிட முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர். இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

எனினும் தரமில்லாமல் வழங்குவதால் மாணவர்கள் சாப்பிடுவதற்கு கஷ்டப்படுகின்றனர். காலையில் உணவு சாப்பிடாமல் வரும் குழந்தைகள், தரமில்லாத உணவை சாப்பிடாமல் பசியோடு வகுப்பறையை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே இது குறித்து புகார் வந்த போது, பொருட்கள் தரமாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.அதன்பின், புகார் வராமல் இருந்தது. உணவுப்பொருட்கள் தரமாக வழங்குவதை உணவுப் பொருள் வழங்கல் துறை வாயிலாக உறுதி செய்யப்படும். இது குறித்து ஆய்வு செய்யப்படும்.புகார் குறித்து ஆய்வு செய்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us