Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழங்குடியின மக்களை பாதிக்கும் அரிவாள் செல் ரத்த சோகை நோய் : 56 பேரிடம் கண்டுபிடிப்பு

பழங்குடியின மக்களை பாதிக்கும் அரிவாள் செல் ரத்த சோகை நோய் : 56 பேரிடம் கண்டுபிடிப்பு

பழங்குடியின மக்களை பாதிக்கும் அரிவாள் செல் ரத்த சோகை நோய் : 56 பேரிடம் கண்டுபிடிப்பு

பழங்குடியின மக்களை பாதிக்கும் அரிவாள் செல் ரத்த சோகை நோய் : 56 பேரிடம் கண்டுபிடிப்பு

ADDED : அக் 17, 2025 11:14 PM


Google News
- நமது நிருபர் -

கோவை பழங்குடியின மக்கள் மத்தியில் அரிவாள் செல் ரத்தசோகை பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு செயல்பாடுகளில் மாவட்ட சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.

அரிவாள் செல் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த அணுக்கள் அதிகளவில் சிதைவு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்நோயுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் குறைபாடு, நீரிழப்பு, காய்ச்சல் ஏற்படும்போது, இயல்பான தட்ட வடிவுடைய ரத்த அணுக்கள், அரிவாள் வடிவத்துக்கு மாறி, சிறு, நுண் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்திவிடும்.

இதனால், எலும்பு வலி, நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், கை, கால் விரல்களில் அழுகல் ஏற்படும்.

இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். இல்லையெனில், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நோயை கண்டறிய கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட பழங்குடியினர் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த, 2022ம் ஆண்டு முதல் இதற்கான ஸ்கிரீனிங் பணிகள் நடக்கின்றன. இதுவரை, அரிவாள் செல் ரத்த சோகை பாதிப்பு 56 பேருக்கும், தலசீமியாபாதிப்பு ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

'இப்பாதிப்பு, காரமடை, பி.என்., பாளையம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. தவிர, இப்பாதிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் மரபணு கொண்டவர்கள், 359 பேரை கண்டறிந்துள்ளோம், ' என்றார்.

ஸ்கிரீனிங் செய்கிறோம்!

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமியிடம் கேட்டபோது, ''பழங்குடியின மக்களிடம் அரிவாள் செல் ரத்த சோகை பாதிப்பு உள்ளதா என்பதை இரண்டு தன்னார்வ அறக்கட்டளை உதவியுடன் ஸ்கிரீனிங் செய்து வருகிறோம். பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றோம். இந்நோய் பாதிப்பு இருப்பின் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பாதிப்பு மரபணு கொண்டவர்கள் திருமணம் செய்யும் முன்னர் உரிய முறையில் மரபணு கவுன்சிலர்களை சந்தித்து கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பாதிப்பு உள்ள இருவர் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகளுக்கு பாதிப்பு வரவும், பிரசவ நேரத்தில் சிரமங்கள் வரவும் வாய்ப்புண்டு, '' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us