Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெளிநாடுகளில் ஆய்வை முடித்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் ஆராய்ச்சி துவங்க ரெடி

வெளிநாடுகளில் ஆய்வை முடித்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் ஆராய்ச்சி துவங்க ரெடி

வெளிநாடுகளில் ஆய்வை முடித்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் ஆராய்ச்சி துவங்க ரெடி

வெளிநாடுகளில் ஆய்வை முடித்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் ஆராய்ச்சி துவங்க ரெடி

ADDED : ஜன 07, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
கோவை:''தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், வெளிநாடுகளில் பல்வேறு ஆய்வுகளுக்காக சென்ற விஞ்ஞானிகள் 45 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது,'' என, பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமான ஐ.சி.ஏ.ஆர்.,ரின் கீழ் ஐ.டி.பி., திட்ட நிதியுதவியில், தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 45 விஞ்ஞானிகள், ஜூலையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட, 19 நாடுகளுக்கு அவரவர் ஆராய்ச்சிகளின் தன்மைக்கு ஏற்ப, பல்கலை நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாட்டு பல்கலைகளில், இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை தங்கி, ஆராய்ச்சி செயல்பாடுகளில் ஈடுபட்டனர். கடந்த மாதம் தமிழகம் திரும்பினர்.

வெளிநாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளை மையமாக கொண்டு பல்வேறு புதிய ஆராய்ச்சிகளுக்கு, தமிழக அரசுக்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கும் கருத்துரு சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, நீர் மேலாண்மை, சூரிய ஆற்றல் வேளாண் சாகுபடி, பயோசார் உற்பத்தியில் மண்வளம் அதிகரித்தல், தாவரங்களின் மரபணு மாற்றம், எம்.ஆர்.ஐ., வாயிலாக விதை குறைபாடுகள் களைதல், நோய் மேலாண்மைக்கு ஏ.ஐ., ஆப் உருவாக்கம், இயற்கை பிரசர்வேடிவ் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுஉள்ளன.

மேலும், நொதி உணவுகள் வாயிலாக ஊட்டச்சத்து அதிகரிப்பு, விவசாய கழிவுகள் வாயிலாக தண்ணீரில் மெட்டல் பிரித்தெடுப்பு, விவசாய கழிவுகளில் இருந்து ஆற்றல் சேமிப்பு, முள்சீதா பழத்தின் புரத துகள் வாயிலாக புற்றுநோய் செல்கள் அழிப்பு உள்ளிட்ட, பல்வேறு பிரத்யேக ஆராய்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி திட்டங்களையும் துவக்கியுள்ளனர். இவ்விஞ்ஞானிகளுக்கு அனைத்து உதவிகளையும் பல்கலை நிர்வாகம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'உர பயன்பாடு குறைக்க ஆய்வு'


விஞ்ஞானி கண்ணன் கூறியதாவது:நம் நாட்டில் மண்வளம், அதிலுள்ள கரிமசத்து வைத்து மதிப்பிடப்படும். 1970ல் 1 கிலோ மண்ணில், 10 முதல் 12 கிராம் கரிமச்சத்து இருந்தது; தற்போது, 1 கிலோவிற்கு 5 கிராம் என்ற அளவில் உள்ளது.விவசாய கழிவுகளை, 'பயோசார்' ஆக மாற்றி, மீண்டும் மண்ணில் செலுத்துவதால் மண் வளம் காக்கப்படுவதுடன், உர பயன்பாடும் குறையும். இதில், சில புதிய தொழில்நுட்பங்களை வெளிநாட்டு பயணத்தில் அறிந்து கொண்டேன்.இங்கு, 1 கோடி ரூபாய் மற்றும் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.



'வீணாகும் உணவே ஆய்வு'


விஞ்ஞானி குருமீனாட்சி கூறுகையில், ''உணவு அதிகளவில் வீணாகிறது. ஒதுக்கப்படும் உணவுகளை, பயன் தருவதாக மாற்றுவதே என் ஆராய்ச்சியின் அடிப்படை. இதுகுறித்த ஆராய்ச்சி, தாய்லாந்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதில் பயன்படும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தவுள்ளேன்.''தமிழக அரசு 48 லட்சம் ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் திராட்சை விவசாயிகளிடம் 'ஜீரோ வேஸ்ட்' என்ற இலக்கை எட்டுவோம். இத்திட்டம், மார்ச் மாதம் முதல் துவங்கவுள்ளது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us