Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

ADDED : மே 17, 2025 01:21 AM


Google News
கோவை : ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோதி; தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன், மனைவி சூர்யா மற்றும், 14 வயது மகனுடன் சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

சூர்யா லோயர் பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ரயில் தர்மபுரி, மொரப்பூர் அருகே வந்த போது, மிடில் பெர்த் சங்கிலியிலிருந்து நழுவி, லோயர் பெர்த்தில் படுத்திருந்த சூர்யா மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

ரயிலில் முதலுதவி பெட்டி இல்லை. சேலம் வரை ரத்தம் சொட்ட, சொட்ட சூர்யா பயணித்தார். சேலம் அரசு மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், வந்தேபாரத் ரயில் தவிர, பிற ரயில்களில் பெரும்பாலும், முதலுதவிப் பெட்டிகள் இருப்பதில்லை.

ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில் பெட்டிகளில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயம். ஒரு சில ரயில்களில், டி.டி.ஆர்., வசம் முதலுதவி பெட்டி இருக்கும்.

'அசம்பாவிதம் ஏற்படும் போது, உடனடி முதலுதவி மேற்கொள்ள முடிவதில்லை. ரயில்வே நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us