Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பில்லாத கட்டடத்தை இடிக்க ஆலோசனை! கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டம்

பராமரிப்பில்லாத கட்டடத்தை இடிக்க ஆலோசனை! கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டம்

பராமரிப்பில்லாத கட்டடத்தை இடிக்க ஆலோசனை! கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டம்

பராமரிப்பில்லாத கட்டடத்தை இடிக்க ஆலோசனை! கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டம்

ADDED : ஜூன் 10, 2025 09:30 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பராமரிப்பில்லாத கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், பழைய பஸ் ஸ்டாண்ட் கடந்த, 1985ம் ஆண்டும், புதிய பஸ் ஸ்டாண்ட், 2009ம் ஆண்டும் கட்டப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, பழநி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இங்கு, மொத்தம், 31 கடைகள், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு நகராட்சி வாயிலாக வாடகைக்கு விடப்பட்டன.கடந்தாண்டு, திருப்பூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் இருந்த பயணியர் நிழற்கூரை சிதிலமடைந்து இடிந்தது. இதையடுத்து, நிழற்கூரை இடித்து அகற்றப்பட்டது.

கடந்தாண்டு ஆக.,30ம் தேதி கடைகளை காலி செய்யக்கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடைக்காரர்கள் கோரிக்கையை ஏற்று கால அவகாசமும் வழங்கப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம் பருவமழை பெய்த போது, அங்கு செயல்பட்ட ேஹாட்டலின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது.

ஆய்வு செய்யப்பட்டு, அசம்பாவிதங்களை தடுக்க கடைகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டது. பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து நிற்பதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. பழநி பஸ்கள், திருப்பூர் பஸ் நிறுத்தப்பகுதி வழியாக செல்கின்றன.

அடைக்கப்பட்டுள்ள வழித்தடம் மீண்டும் திறக்கப்படுமா, கடைகள் செயல்பாட்டுக்கு வருமா என எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது, அந்த கடைகளை இடித்து அகற்றவும், கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பராமரிப்பில்லாத கட்டடங்களால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.தற்போது மழை காலம் துவங்கியுள்ள நிலையில், பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே, பராமரிப்பில்லாத கட்டடங்களை இடித்து அகற்றவும், அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதற்கும் ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us