Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனியார் 'பார்' திறக்க மக்கள் எதிர்ப்பு ஒன்றிய அதிகாரிகளிடம் மனு

தனியார் 'பார்' திறக்க மக்கள் எதிர்ப்பு ஒன்றிய அதிகாரிகளிடம் மனு

தனியார் 'பார்' திறக்க மக்கள் எதிர்ப்பு ஒன்றிய அதிகாரிகளிடம் மனு

தனியார் 'பார்' திறக்க மக்கள் எதிர்ப்பு ஒன்றிய அதிகாரிகளிடம் மனு

ADDED : ஜன 02, 2024 11:36 PM


Google News
உடுமலை;மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 'பார்' திறக்க எதிர்ப்பு தெரிவித்து குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, உடுமலை - செஞ்சேரிமலை ரோடு இணையும் நால்ரோடு சந்திப்பில் பெதப்பம்பட்டியில் உள்ளது. இப்பகுதியில், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாற்பாலைகள் அமைந்துள்ளன.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், பஸ் ஸ்டாப் அருகில், மக்களுக்கு இடையூறாக தனியார் 'பார்' அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பி.டி.ஓ.,க்களிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

பெதப்பம்பட்டி நால்ரோட்டில், தனியார் 'பார்' அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார், 150 மீட்டருக்குள் கோவில், சந்தை, பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணியர் காத்திருக்கும் பஸ் ஸ்டாப்பும் அப்பகுதியிலேயே உள்ளது.

பெதப்பம்பட்டியில் ஏற்கனவே, இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு, 'குடி'மகன்களால், மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக 'பார்' துவக்கினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, புதிதாக 'பார்' அமைக்க அனுமதி வழங்ககூடாது. மற்ற இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us