/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மீட்டர் கேஜ் கால ரயில்களை இயக்குங்க! பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல் மீட்டர் கேஜ் கால ரயில்களை இயக்குங்க! பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
மீட்டர் கேஜ் கால ரயில்களை இயக்குங்க! பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
மீட்டர் கேஜ் கால ரயில்களை இயக்குங்க! பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
மீட்டர் கேஜ் கால ரயில்களை இயக்குங்க! பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2025 08:20 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் கடந்த, 2015ம் ஆண்டும், பொள்ளாச்சி - போத்தனுார் பாதை, 2017ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதன்பின், எண்ணிக்கை அளவில் குறைந்த ரயில்களே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென, பொள்ளாச்சி, கோவில்பாளையம், கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலசங்கத்தினர், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி., ஈஸ்வரசாமியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பொள்ளாச்சி வழியாக கோவை - பெங்களூரு உதய் டபுள் டக்கர் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணியர் ரயிலை, 'ஆனைமலை ரோடு' நிறுத்தத்துடன், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னைக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும்.
மீட்டர் கேஜ் காலத்தில், பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட கோவை - ராமேஸ்வரம் தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்ட திருவனந்தபுரம் - பொள்ளாச்சி - மதுரை தினசரி ரயிலை ராமேஸ்வரம் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். மங்களூரு - ராமேஸ்வரம் ரயிலை பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும்.
திருச்செந்துார் - பொள்ளாச்சி - பாலக்காடு ரயிலில், கூடுதலாக நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் மற்றும், இரண்டு முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகள் இணைக்க வேண்டும். இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இவ்வாறு, கூறினர்.