ADDED : மே 11, 2025 11:53 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால், இளநீர் தேவையும் உயர்ந்துள்ளது.
தேவைக்கு ஏற்ப இளநீர் உற்பத்தி இல்லாததால், கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் நலன் கருதி, இந்த வாரம் இளநீர் விலை உயர்த்தப்படவில்லை. விவசாயிகள், எக்காரணத்தைக் கொண்டும் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.