Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க 'ரீ சர்வே' செய்யணும்! இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க 'ரீ சர்வே' செய்யணும்! இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க 'ரீ சர்வே' செய்யணும்! இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க 'ரீ சர்வே' செய்யணும்! இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

ADDED : மே 15, 2025 11:14 PM


Google News
வால்பாறை; ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, 'ரீ சர்வே' செய்ய வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 56 எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள், அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. கடந்த, 2018ம் ஆண்டு கண்துடைப்புக்காக வால்பாறையில் அதிகாரிகள் மறு சர்வே செய்தனர்.

ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும்,அரசு நிலங்களை மீட்க அதிகாரிகள், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த, 1993ம் ஆண்டுக்கு பின், கடந்த, 2018ல் முதன் முறையாக மறு சர்வே செய்யும் பணி நடந்தாலும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை மலைப்பகுதியில் தோட்ட பயிர்கள் பயிரிடுவதற்காக அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, மிளகு, ஏலம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டன.

இதனால், வனவிலங்குகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், மனித -- வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யானைகள் வழித்தடங்களை மறித்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளதாலும், ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளதாலும், மனித - வனவிலங்கு மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அடர்ந்த வனப்பகுதியாக இருந்த காடுகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் சார்பில் அங்கு தேயிலை பயிரிட்டுள்ளனர். இது தவிர, வால்பாறை நகரை சுற்றியுள்ள பகுதியிலும் அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

எனவே, வால்பாறையில் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்க, உயர்அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் 'ரீ சர்வே' செய்ய வேண்டும். இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us