Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமங்களில் நிரம்பிய நீர்நிலைகள் பருவமழை கைகொடுத்தது

கிராமங்களில் நிரம்பிய நீர்நிலைகள் பருவமழை கைகொடுத்தது

கிராமங்களில் நிரம்பிய நீர்நிலைகள் பருவமழை கைகொடுத்தது

கிராமங்களில் நிரம்பிய நீர்நிலைகள் பருவமழை கைகொடுத்தது

ADDED : ஜூன் 22, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் பெய்த தொடர் மழையால், ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள், தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

தென் மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.

அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த வாரங்களில், பலத்த மழை பெய்தது. இதனால், கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளுக்கு, நீர் வரத்தொடங்கியது.

இதனால், கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

குறிப்பாக, தேவம்பாடிவலசு குளம், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம், கொள்ளப்பட்டி குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தற்போது, அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தென்னை சாகுபடிக்கு, தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன.

மேலும், கிணறு மற்றும் குளங்கள் வாயிலாக பாசன வசதியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், காய்கறி சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான குளம், குட்டைகள் உள்ளன. பல நீர்நிலைகளுக்கான கால்வாய்கள், ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி வருகின்றன. மேலும், முட்புதர்கள் நிறைந்து, காடு போல் காட்சி அளிக்கிறது.

நீர்நிலைகளுக்கான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நீர்நிலை ஒட்டிய பகுதிகளில், குப்பை கொட்டப்படுவதை தடுக்க அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு, நீர்நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும்.

இவ்வாறு, கூறினர்.

இந்த பிரச்னையில், தமிழக அரசும், பொதுப்பணித்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us