/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'ரியல் ஹீரோ'வுக்கு மத்திய அரசு வழங்கும் கவுரவம்! குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி'ரியல் ஹீரோ'வுக்கு மத்திய அரசு வழங்கும் கவுரவம்! குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி
'ரியல் ஹீரோ'வுக்கு மத்திய அரசு வழங்கும் கவுரவம்! குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி
'ரியல் ஹீரோ'வுக்கு மத்திய அரசு வழங்கும் கவுரவம்! குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி
'ரியல் ஹீரோ'வுக்கு மத்திய அரசு வழங்கும் கவுரவம்! குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி
ADDED : ஜன 07, 2024 12:34 AM

வால்பாறை;புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, வால்பாறை அருகேயுள்ள கல்லார்குடியை சேர்ந்த பழங்குடியின தம்பதி பங்கேற்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது கல்லார்குடி பழங்குடியின செட்டில்மென்ட்டில், மொத்தம், 27 குடும்பங்கள் உள்ளன. இக்குடியிருப்பை சேர்ந்த ராஜலட்சுமி, ஜெயபால் தம்பதி, புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், கலந்து கொள்ள மத்திய பழங்குடியின நல அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
75வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க, வரும், 22ம் தேதி இருவரும் புதுடில்லி செல்கின்றனர். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பிப்., 2ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர்.
வாழ்க்கையில் புயல்
குடியரசு தின விழாவில், பழங்குடியின தம்பதி பங்கேற்பது குறித்த பின்னணி வருமாறு:
வால்பாறை நகரிலிருந்து, 15 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லார்குடி செட்டில்மென்ட் கிராமம் உள்ளது. இங்கு, மிளகு, காப்பி, ஏலம், வாழை, கிழங்கு, கீரை என, சாகுபடி செய்து, விளைபொருட்களை வால்பாறை நகரில் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில், அங்குள்ள மக்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
கடந்த, 2019ம் ஆண்டு கனமழை பெய்த போது, கல்லார்குடி பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் புயல் வீசியது. அங்கிருந்த, 27 வீடுகள் மழையில் அடித்துச்செல்லப்பட்டன. வீடு இழந்து வீதியில் நின்றனர். தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் அவர்கள் தங்குவதற்கு வனத்துறையினர் தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்தனர்.
அறவழி போராட்டம்
இதனிடையே, கல்லார்குடியில் மீண்டும் பழங்குடியின மக்களை குடியமர்த்த அனுமதிக்க முடியாது என, வனத்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, தெப்பக்குளம் மேடு பகுதியில் வீடு கட்ட வனத்துறையினரிடம் மக்கள் அனுமதி கேட்டனர்.
குடியிருக்க வேறு இடம் இல்லாததால், தெப்பக்குளம் மேடு பகுதியில் தற்காலிகமாக குடிசை அமைத்தனர். ஆனால், வனத்துறையினர் அந்த குடிசையை அகற்றினர். இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, பழங்குடியின மக்களின் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த, ராஜலட்சுமி தலைமையில் பழங்குடியின மக்கள் தெப்பக்குள மேடு பகுதியில் வீடு கட்ட இடம் வழங்க வேண்டும் என, அறவழியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
'ரியல் ஹீரோ'
மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சு நடத்தி, அங்கு வீடு கட்ட அனுமதி வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கு, தலா, 1.5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்காமல் வனத்துறையினர் இழுத்தடித்தனர்.
அதன்பின், பட்டா வழங்க கோரி மீண்டும் போராட்டம் நடந்தது. இறுதியாக, வால்பாறை நகரில் நடந்த அரசு விழாவில், கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. குடியிருப்புகளை மக்களே அமைத்து, அங்கு செல்ல பாதை வசதியையும் ஏற்படுத்தினர். ஏற்கனவே வசித்த கல்லார்குடியில் விவசாயம் செய்கின்றனர்.
இதற்கெல்லாம், முக்கிய காரணமாக இருந்து, பழங்குடியினர் நலனுக்காக அறவழியில் போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் கண்ட ராஜலட்சுமி, அவருக்கு உறுதுணையாக இருந்த கணவர் ஜெயபால் இருவருக்கு, புதுடில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.