ADDED : மே 22, 2025 01:03 AM
கோவை; ரத்தினபுரி பகுதியில் மகளை தாக்கிய தந்தையை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரத்தினபுரி, கோவிந்தசாமி வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, 49. இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் பிரியதர்ஷினி, படித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார்.
திருமூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மதுபோதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்ட இவர், பிரியதர்ஷினியை வேலைக்கு செல்லுமாறு கூறி அடிக்கடி அவரிடம் பிரச்னை செய்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 18ம் தேதி திருமூர்த்தி, பிரியதர்ஷினியை வேலைக்கு செல்லுமாறு கூறி தகராறு செய்தார். தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை சரமாரியாக தாக்கினார்.
பிரியதர்ஷினி ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரில், போலீசார் திருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.