Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரும் 22, 23ம் தேதிகளில் டான்செட், சீட்டா தேர்வுகள்

வரும் 22, 23ம் தேதிகளில் டான்செட், சீட்டா தேர்வுகள்

வரும் 22, 23ம் தேதிகளில் டான்செட், சீட்டா தேர்வுகள்

வரும் 22, 23ம் தேதிகளில் டான்செட், சீட்டா தேர்வுகள்

ADDED : மார் 20, 2025 05:36 AM


Google News
கோவை : வரும், 22, 23ம் தேதிகளில் நடக்க உள்ள டான்செட், சீட்டா தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள், நடந்து வருகின்றன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்பு களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2025 - -26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜன., மாதம் துவங்கியது; பிப்., 21ம் தேதி விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.

எம்.சி.ஏ., படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும், 22ம் தேதி காலை 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.

எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு, அன்றைய தினம் மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடக்கிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு, 23ம் தேதி காலை 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.

கோவையில், 5,471 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக கோவை தடாகம் ரோடு, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை சோமையம்பாளையம் அண்ணா பல்கலை மண்டல மையம், பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, நீலாம்பூர், பி.எஸ்.ஜி., ஐ டெக், சிட்ரா, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்கிறது.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us