/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சினிமா, டி.வி., நாடகங்களால் சலிப்பு; மேடை நாடகங்களுக்கு வரவேற்பு துள்ளிக்குதிக்கிறார் 'கோவை சிவாஜி' சினிமா, டி.வி., நாடகங்களால் சலிப்பு; மேடை நாடகங்களுக்கு வரவேற்பு துள்ளிக்குதிக்கிறார் 'கோவை சிவாஜி'
சினிமா, டி.வி., நாடகங்களால் சலிப்பு; மேடை நாடகங்களுக்கு வரவேற்பு துள்ளிக்குதிக்கிறார் 'கோவை சிவாஜி'
சினிமா, டி.வி., நாடகங்களால் சலிப்பு; மேடை நாடகங்களுக்கு வரவேற்பு துள்ளிக்குதிக்கிறார் 'கோவை சிவாஜி'
சினிமா, டி.வி., நாடகங்களால் சலிப்பு; மேடை நாடகங்களுக்கு வரவேற்பு துள்ளிக்குதிக்கிறார் 'கோவை சிவாஜி'
ADDED : ஜூன் 01, 2025 01:27 AM

''சினிமாவும், டி.வி., யும் மக்களை சலிப்படைய வைத்து விட்டதால், எதார்த்தமான மேடை நாடகங்களை, மக்கள் ரசிக்க துவங்கி உள்ளனர், ' என்கிறார் நாடக இயக்குனர் ஜெகன்.
'கோவை சிவாஜி' என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்படுபவர், நாடக நடிகர் மற்றும் இயக்குனர் ஜெகன். கோவை ராம்நகர் பகுதியில் வாசித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில், நடித்து இருக்கிறார்.
50 நாடகங்களை எழுதி, இயக்கி இருக்கிறார். இவரது நாடக கலைச்சேவையை பாராட்டி, பல அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளன. கலாலயா என்ற நாடக குழுவை நடத்தி வருகிறார்.
தினமலர் நாளிதழுக்காக அவரை சந்தித்தோம்..
''நான் ராம்நகர் சபர்பன் பள்ளியில்தான் படித்தேன். அப்போது வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது, எங்கள் வகுப்பு ஆசிரியர் போல் நடித்து காட்டினேன். சக மாணவர்கள் கைதட்டி பாராட்டினர். இந்த விஷயம் எங்கள் ஆசிரியருக்கு தெரிந்து விட்டது. அவர் கூப்பிட்டு திட்டுவார் என நினைத்தேன். ஆனால் அவர் என்னை பாராட்டியதோடு, ஸ்கூல் டிராமாவில் நடிக்கவும் சொல்லிவிட்டார்,''
அரிதாரம் பூசிய முதல் வேடம்?
''பள்ளி ஆண்டு விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மன் போல நடித்தேன். அதுதான் முதல் மேடை நடிப்பு. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் விமலா ரமணி, என் நடிப்பை பார்த்து அவரது நாடக குழுவில் சேர்த்துக் கொண்டார். அவரது குழுவில் தொடர்ந்து நடித்து வந்த போது, கல்யாண்ஜி என்பவர் கலாலயா நாடக குழுவை துவக்கினார். அவரது 'ஜட்ஜ்மென்ட்' என்ற நாடகத்தில், கதாநாயகனாக நடித்தேன். இப்போது 300 நாடகங்களுக்கு மேல் நடித்து விட்டேன்,''
''சிவாஜி என்றால் அவ்வளவு பிடிக்குமா?''
''அதென்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நடிகர் சிவாஜிகணேசன் ரசிகன் என்பதால், அவர் படங்களை பார்த்து, நடிப்பில் எனக்கு அவரது சாயல் வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்,''
''இப்போதும் நாடகங்களில் நடிக்கிறீர்களா?''
''கல்யாண்ஜி மறைவுக்கு பிறகு, கலாலயா நாடக குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறேன். பல நாடக போட்டிகளில் எனது நாடகங்கள் பரிசுகளை வென்றுள்ளன,''
''நாடகங்களுக்கு எதிர்காலம் இருப்பதாக நினைக்கிறீர்களா?''
''1970ம் ஆண்டுகளில், கோவையில் ஆறு நாடக குழுக்கள் இருந்தன. அப்போது மாதம் இரண்டு நாடகமாவது நடக்கும். இங்கு நாடக ரசிகர்களும் ஏராளம் இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் போய் நாடகம் நடத்தி இருக்கிறேன்,''
''1990க்கு பிறகு மேடை நாடகங்களுக்கு இருந்த செல்வாக்கு குறைந்தது. நாடகம் பார்க்க மக்கள் அரங்கத்துக்கு வருவதில்லை. நாங்களே பணம் போட்டும், நன்கொடை பெற்றும் இலவசமாக நாடகம் போட்டோம். இருந்தும் கூட்டமில்லை,''
''கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் நடத்தும் நாடகங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். இது ரொம்ப மகிழ்ச்சியாக இருகிறது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மேடை நாடகங்கள் நடத்த ஊக்கப்படுத்தி உதவி வருகிறது,''
''அதனால் கோவையில் மீண்டும் மேடை நாடகங்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சினிமாவும், டி.வி.,யும் மக்களை சலிப்படைய வைத்து விட்டன. அதனால் எதார்த்தமான நாடகங்களை மக்கள் ரசிக்க துவங்கி உள்ளனர். இதை தக்க வைக்க நாடக இயக்குனர்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும்.''