Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரட், பீன்ஸ், உருளை... விலை உயர்ந்தது! விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட், பீன்ஸ், உருளை... விலை உயர்ந்தது! விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட், பீன்ஸ், உருளை... விலை உயர்ந்தது! விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட், பீன்ஸ், உருளை... விலை உயர்ந்தது! விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : மே 12, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஊட்டி கேரட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஊட்டி கேரட்களின் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் ஊட்டி உருளைக்கிழங்குகளின் விலையும் பல மாதங்களுக்கு பின் உயர்ந்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

ஊட்டி, கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கேரட், பீன்ஸ் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வருகின்றன. தற்போது, ஊட்டி கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு தற்போது தினமும் ஊட்டி கேரட் 80 வண்டிகளில் 320 டன் வரை வருகிறது. பீன்ஸ் 500 மூட்டைகள் வரை வருகிறது.

ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ. 25 முதல் ரூ. 40 வரையிலும், பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகிறது.

கேரளா வியாபாரிகள் ஊட்டி கேரட்களை விரும்பி வாங்குகின்றனர். இதனால் ஊட்டி கேரட் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஊட்டி கேரட் விலை ஏறாமல் இருந்தது.

தற்போது விலை ஏறி வருகிறது. நேற்று முன் தினத்தை விட, நேற்று ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு ரூ.10 உயர்ந்துள்ளது. பீன்ஸ் ஒரு கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடியுள்ளது.கோடை காலம் முடிவதற்குள் விலை இன்னும் ஏறும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கேரட் விவசாயிகள் கூறுகையில், ''கேரட் வரத்து குறைவாக உள்ளதால் விலை ஏறி வருகிறது. இன்னும் வரத்து குறையும், இதனால் விலை மேலும் ஏறும். ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை விற்பனையானது. நேற்று மூட்டை ஒன்று ரூ.1,740க்கு விற்பனையானது. நாளுக்கு நாள் ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us