Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு; தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு; தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு; தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் வருகை குறைவு; தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

ADDED : செப் 18, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
கோவை; பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறை ரத்து செய்யப்பட்டதால், அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறைந்திருக்கிறது. மாதாந்திர தேர்வுகளிலும் அலட்சியம் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர்.

தமிழகத்தில், 10 மற்றும், 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. 2025 - 26 கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இது, மாணவர்கள் மத்தியில் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்து, அலட்சியப் போக்கிற்கு வழிவகுத்துள்ளது.

பிளஸ் 1 பாடங்களை முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே ஜே.இ.இ. நீட், கியூட் போன்ற அகில இந்திய போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு காரணமாக, பாடங்களை முழுமையாக படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆண்டுத்தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்ற மனோநிலை மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு, போட்டித்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதோடு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் கூறுகையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறைக்கு வந்தபின், செயல்முறை தேர்வுகள் உட்பட அனைத்திலும் மாணவர்கள் கவனம் செலுத்தினர். தேர்வு ரத்து அறிவிப்புக்கு பின், பிளஸ் 1 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதால், மாணவர்களிடம் அலட்சியப்போக்கு அதிகரித்துள்ளது. 2018 வரை மாவட்ட அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, மற்ற பள்ளி ஆசிரியர்களால் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. மீண்டும் அதே நடைமுறை பின்பற்றப்படுமா அல்லது பள்ளி அளவிலேயே விடைத்தாள் திருத்தப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை' என்றனர்.

வணிகவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் கூறுகையில், 'பொதுத்தேர்வு ரத்து அறிவிக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். முன்பு மாதத்தேர்வுகளில் 25 மாணவர்கள் ரேங்க் எடுத்தனர்; இப்போது 5 மாணவர்களே ரேங்க் எடுக்கின்றனர். 80 சதவீத பள்ளி வருகைப்பதிவு இருந்தால் 2 மதிப்பெண், 75--80 சதவீதம் இருந்தால் 1 மதிப்பெண் தரப்படும்.

அதற்கும் குறைவாக இருந்தால், அகமதிப்பீடு (இன்டர்னல்) மதிப்பெண் தரப்படுவதில்லை.

'பிளஸ் 1ல் மாணவர்கள் வருகை குறைவது, பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us