/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ADDED : மார் 23, 2025 09:56 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கல்லாபுரம் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில், தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இயற்கை விவசாயி சம்பத்குமார் பேசியதாவது:
தென்னைக்கு அதிகமாக மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும். தற்போது மண் வளம் மற்றும் அங்கக சத்து குறைந்து வருகிறது. இதை இயற்கை முறையில் அதிகரிக்க வேண்டும்.
தென்னையை ஒற்றை பயிராக இருந்தால் அதை தவிர்த்து, இதனுடன் ஊடுபயிராக பிற பயிர்கள் நடவு செய்ய வேண்டும். மண்ணில் அதிகம் வெயில் படக்கூடாது. முடாக்கு மிகவும் அவசியம். பயிர்களுக்கு, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் போன்றவைகளை கொடுக்க வேண்டும். இதை செய்தால், தென்னை மற்றும் பிற பயிர்கள் நோய் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, பேசினார்.
வேளாண் விஞ்ஞானி சகாதேவன் பேசியதாவது:
தென்னையில், 800க்கும் மேற்பட்ட பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதில், 5 வகையான வெள்ளை ஈ தென்னையை தாக்குகிறது. இதை அழிக்க முடியாது, ஆனால் கட்டுப்படுத்தலாம்.
மேலும், பூச்சியின் பருவம், வளரும் தன்மை, பெருக்கம் அடையும் விதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறி, ஈக்களை சாப்பிடும் எதிரி பூச்சிகள் போன்றவைகள் உபயோகிக்க வேண்டும். மேலும், மண் வளத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெள்ளை ஈ பாதிப்பை தடுக்க முடியும்.
இவ்வாறு, பேசினார்.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி பேசியதாவது:
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். இதில், செயற்கை பயிர்த்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தினால், இயற்கை எதிர்உயிரிகள் அழித்து விடும்.
கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இயற்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். மேலும், வெள்ளை ஈக்கள் தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சானத்தை கட்டுப்படுத்த, மைதா மாவு கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மில்லி சேர்த்து, இலைகளின் கீழ் அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூஞ்சானம் மீது படுமாறு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து இயற்கை முறையில் தென்னை மரத்தை வளமாக வளர்ப்பது மற்றும் ஒருங்கிணைந்த முறையில் ரூகோஸ் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு கருத்து காட்சி காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, வேகமாக தண்ணீர் பாய்ச்சி அடித்தல், மஞ்சள் ஒட்டு பொறி, என்கார்சியா ஒட்டுண்ணி, கிரைசோபிட் இரை விழுங்கி, மைதாமாவு கரைசல், சோலார் விளக்கு பொறி உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கதுடன் காண்பிக்கப்பட்டது.
துணை தோட்டக்கலை அலுவலர் பெருமாள்சாமி, வேளாண் பல்கலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.