Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அருட்செல்வர் மகாலிங்கம் மொழி பெயர்ப்பு விருது; தகுதி பெற்றவர்களுக்கு அக்.2ல் பரிசு

அருட்செல்வர் மகாலிங்கம் மொழி பெயர்ப்பு விருது; தகுதி பெற்றவர்களுக்கு அக்.2ல் பரிசு

அருட்செல்வர் மகாலிங்கம் மொழி பெயர்ப்பு விருது; தகுதி பெற்றவர்களுக்கு அக்.2ல் பரிசு

அருட்செல்வர் மகாலிங்கம் மொழி பெயர்ப்பு விருது; தகுதி பெற்றவர்களுக்கு அக்.2ல் பரிசு

ADDED : செப் 16, 2025 09:49 PM


Google News
பொள்ளாச்சி; அருட்செல்வர் மகாலிங்கம் மொழி பெயர்ப்பு விருதுக்கு தகுதி பெற்றவர்களுக்கு, அக்., 2ல் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான விருது தேர்வுக்கான நடுவர் குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நடுவர்களாக திறனாய்வாளர் பஞ்சாங்கம், விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம், மொழி பெயர்ப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அருந்ததிராயின் 'சின்ன விஷயங்களின் கடவுள்' என்ற ஆங்கில நாவலை அதே தலைப்பில் மொழிபெயர்த்த குப்புசாமி, ஹிந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் நாவலை 'மணல் சமாதி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த அனுராதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

அதேபோல, ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய 'மாதா ஆப்பிரிக்கா' என்ற நாவலைத் தமிழில் மொழி பெயர்த்த குறிஞ்சிவேலன், அப்துல்ரசாக் குர்னாவின் 'போரொழிந்த வாழ்வு' என்ற நாவலைத் தமிழில் மொழி பெயர்த்த கயல் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். அவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தவிர, சார்லஸ் ஆலன் எழுதிய வரலாற்று நுாலை 'பேரரசன் அசோகன்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்த தருமி; ராபின் டேவிட்சன் எழுதிய பயண இலக்கியத்தை 'தடங்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த பத்மஜா நாராயணன், தற்கால ஆங்கில சிறுகதை தொகுப்பை 'அழிக்க முடியாத ஒரு சொல்' என மொழிபெயர்த்த அனுராதா, சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி நுாலை 'தமிழ் நிலத்தில் அகஸ்தியர்' என்ற தலைப்பில் மொழி பெயர்த்த இஸ்க்ரா ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இவர்களுக்கான விருதுகள், அக்., 2ல், சென்னை மயிலாப்பூர் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் வள்ளலார் காந்தி விழாவில் வழங்கப்படும் என, மொழி பெயர்ப்பு மையத் தலைவர் மாணிக்கம், இயக்குநர் பாலசுப்ரமணியம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us